islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களால் ஆட்சியை இழந்த இடதுசாரிகள்




மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் நம்பிக்கையை இழந்ததே இடதுசாரிகள் 34 ஆண்டுகால ஆட்சியைப் பறிகொடுக்க முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
பாட்டாளி மக்களின் துயர் துடைக்கும் இடதுசாரிகளின் பிரதான சித்தாந்தத்தில் அக்கட்சியினர் சமரசமாகிவிட்டனர். சமீபகாலமாக முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் போக்கு அமைந்துள்ளது என்று பரவலானக் கருத்து நிலவுகிறது.

இப்படி பாட்டாளி மக்களைவிட்டு அன்னியப்பட்டுப் போனதன் விளைவுதான் இடதுசாரி கோட்டையான மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரி முதல்தடவையாக 1977-ல் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்ததும் நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது. அக்கட்சியின் இத்தகைய அதிரடி நடவடிக்கையால் சமுதாயத்தில் கீழ்நிலையில் இருந்த தொழிலாளிகள் நல்ல பலன் அடைந்தனர். இதற்கு நன்றிக்கடனாக தங்களது ஆதரவை இடதுசாரிகளுக்கு தொடர்ந்து அளித்து வந்தனர்.
குறிப்பாக வங்கதேசத்தின் எல்லைப் பகுதியை ஒட்டி வாழும் ஏழை முஸ்லிம் மக்கள் இடதுசாரிகளின் நிலச் சீர்திருத்தக் கொள்கையால் பயன் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இடதுசாரியினர்தான் தங்களது பாதுகாவலர்கள் என்று நினைக்கத் தொடங்கி அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிவந்தனர்.
ஆனால் சமீபகாலமாக தொழிற்சாலை அமைப்பதற்கும், நகரமயமாதலுக்கும் இடதுசாரி அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது அவர்களை கவலையில் ஆழ்த்தியது. ஏழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த விவசாய நிலங்களைப் பிடுங்கி அதில் தொழிற்சாலைகளை கட்டியது. இதற்கு மக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தும் அதை அரசு கண்டு கொள்ளவில்லை.
இதனால் 2008-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், 2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் இடதுசாரிகளுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியைப் பதிவு செய்தனர். இதன் பிறகாவது இடதுசாரி அரசு நிலையில் மாற்றம் இருக்கும் என்று நம்பினர். ஆனால் இடதுசாரி அரசின் செயல்பாட்டில் மாற்றமில்லை.
தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலங்கள் பறிப்பு, நகரமயமாதலுக்கு முக்கியத்துவம் ஆகியவை தொடர்ந்து அரங்கேறியதால் இடதுசாரி மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்தனர். குறிப்பாக இதே நிலை தொடர்ந்தால் தாங்களும் விவசாய நிலங்களைப் பறிகொடுக்க இயலும் என்று முஸ்லிம் சமுதாயத்தினர் கருதினர்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்களின் நலனுக்காக இடதுசாரி அரசு உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. அவர்களின் வாழ்க்கை நிலையில் மாற்றமில்லை என்று சச்சார் குழு தனது அறிக்கையில் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
வேளாண் நிலம் பறிக்கப்படலாம் என்ற அச்சமும், சச்சார் கமிட்டி கருத்தால் ஏற்பட்ட அதிருப்தியும் இடதுசாரிகளுக்கு எதிராக முஸ்லிம் மக்களை திசை திருப்பியது. இடதுசாரிகளுக்கு தக்கப் பாடம்புகட்ட தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வைத்தது.
மேற்கு வங்கத்தில் சுமார் 10 மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்த 10 மாவட்டங்களிலும் 125 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் நீண்ட ஆண்டுகாலமாக தனிப்பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த இடதுசாரிகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாகப் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கின. அதேசமயம் இப்பகுதியில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் பிரகாசிக்கத் தொடங்கியது.
இத்தேர்தலில் இப்பகுதியில் 90-க்கு மேலான தொகுதிகளை இடதுசாரிகள் இழந்து மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்துவிட்டன.
முஸ்லிம் மக்கள் இப்படி மாறுவார்கள், தாங்கள் ஆட்சியைப் பறி கொடுப்போம் என்று இடதுசாரிகள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
மம்தாவை நம்புகிறோம். அவர் ஒழுங்காகச் செயல்படவில்லை என்றால் அவருக்கும் இதே நிலைதான் என்றே அந்த மாநில மக்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment