islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

அரஃபா நோன்பு



ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.

இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 
                   துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                         நூல்:முஸ்லிம்(2151)

இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.              
                       நூல்: இப்னுமாஜா(1722)

'அரபா நோன்பு' - பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா?

நாம் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வின் கட்டளையிலோ, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலோ எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் கவனமாக பார்ப்போமானால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய்விடும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்காலமும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்!

எனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற அண்ணல் நபியவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:

"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
          அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி);  நூல்:புகாரி(1906)

அதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!)  உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)

மேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

"நீங்கள் 'நோன்பு' என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். 'நோன்புப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாளாகும். 'ஹஜ்ஜுப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                   அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி); நூல்:திர்மிதீ

துல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 - ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் 'ஒன்பதாவது நாள்' என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.

"நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்" என்று ஹுனைதா இப்னு காலித்(ரலி) அறிவிக்கிறார்கள்.
                    நூல்கள்: அபூதாவூத், நஸாயி, அஹ்மத்

"துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"  என்று அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
                         நூல்:முஸ்லிம்(2151)

அதேசமயம் 'ஒன்பதாம் நாள்' என்று குறிப்பிட்டு சொல்லாமல் 'அரஃபா நாள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
             அறிவிப்பவர்:அபூகதாதா(ரலி); நூல்:முஸ்லிம்(1977)

துல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு 'அரஃபா நாள்' என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள், 'அரஃபா நாள்' என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு 'அரஃபா நாள்' என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்? என்பதைதான் நாம் கவனிக்கவேண்டும்.

'டெலிஃபோன் வசதிகளோ, ஈ-மெயில்/எஸ்.எம்.எஸ் வசதிகளோ இல்லாத காலமாக இருந்ததால் அவர்களால் தகவல் அறிந்துக் கொள்ளமுடியவில்லை' என்றும், 'நமக்கு இன்றைய காலகட்டத்தில் உடனுக்குடன் அறியக்கூடிய எல்லா வசதிகளும் இருப்பதால் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளைக் கணக்கிடுவதற்காக நாம் சவூதியின் முதல் பிறையை அறிந்துக் கொண்டு, சவூதியின் 9 வது பிறையில் அரபா நோன்பை நோற்றுக் கொள்ள வேண்டியதுதான்' என்றும் தங்களின் இஷ்டத்துக்கு மார்க்கத்தில் விளையாடுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை இறையச்சமுள்ள‌ ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்படுவதால் மார்க்கத்தின் சட்டங்கள் கியாம (இறுதி)நாள் வரையிலும் மாறப்போவதில்லை.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் விஞ்ஞான வசதிகள் இல்லாவிட்டாலும், மக்காவில் முதல் பிறைக் காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்துவர‌ வசதிகள் இருந்தன. அப்படியிருந்தும் கூட‌ நபி(ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை. அதாவது அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை/மக்காவில் எப்போது முதல் பிறை என்பதை விசாரித்து வருவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஹாஜிகள் எப்போது அரஃபாவில் தங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான், மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள்.

எனவே அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்பது சவூதியில் பிறைப் பார்த்த கணக்குப்படி நமக்கு எட்டாம் நாளாகக்கூட‌ இருக்கலாம். நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை. 'அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடியதை உறுதி செய்துக்கொண்டு நோன்பு வையுங்கள்' என்று எங்குமே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆக, மதீனாவில் வாழ்ந்த நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உள்ள நிலையைப் பின்பற்றத் தேவையில்லை என்று எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ, அவ்வாறுதான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நாம் நம் பகுதியில் பிறைப் பார்த்த கணக்குப்படிதான் ஒன்பதாம் நாளில் அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.

ஆக‌வே, நபிவழியின் அடிப்படையில் இந்த அர‌ஃபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!

குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி - பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு!


                                                    
"குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களை மட்டும் தொடர்புபடுத்திச் செய்தி வெளியிடுவது பிரித்தாளும் சூழ்ச்சி" என பிரஸ் கவுன்சில் தலைவரான நீதியரசர் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு சென்னையில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான‌ கருத்தரங்கில் பேசியதாவது:

"நண்பர்களே,
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில்தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன்.

தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னுடைய பணியைச் சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்றும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் மத்திய அரசாங்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கென்று விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (a) கருத்துச் சுதந்திரத்தோடு ஊடகத்துக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளதுசானால் அந்தச் சுதந்திரம் கட்டுப்பாடற்ற வகையில் இருக்க முடியாது. நியாயமான சில கட்டுப்பாடுகள் வேண்டும். பாரபட்சமில்லாமல் உண்மைத்தன்மையோடு மக்களுக்கு செய்திகளைத் தர வேண்டியது, ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கடமை. ஆனால், இந்திய ஊடகங்கள் இந்தச் செயலை பொறுப்போடு செய்கின்றனவா?

பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செயல்படுவது குறித்த சில சம்பவங்களைப் பார்ப்போம்.

ஊடகங்கள் பல நேர்வுகளில் செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன.

உச்ச நீதிமன்ற நீதிபதி க்யான் சுதா மிஷ்ராவோடு நான் உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் பல மாதங்கள் அமர்ந்திருக்கிறேன். ஒரு நாள் இந்தியாவின் முக்கிய செய்தித் தாள் ஒன்று முதல் பக்கத்தில் நீதிபதி மிஷ்ராவின் புகைப்படத்தை வெளியிட்டு "தன் மகள்கள் கடன் சுமை (liability) என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கிறார்" என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தி முழுக்க முழுக்க திரிக்கப் பட்ட உண்மைக்குப் புறம்பான செய்தி; அதுவும் பிரபலமான ஆங்கில செய்தித் தாளின் முதல் பக்கத்தில் வந்தது.

உண்மை நிலவரம் என்னவென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக்களையும் கடன்களையும் வெளியிட வேண்டும். கடன்கள் என்ற பிரிவில், நீதிபதி மிஷ்ரா "இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். மிகச் சரியாகப் பார்த்தால், இதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை. கடன்கள் என்றால் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவைதான் அடங்கும். ஆனால் நீதிபதி மிஷ்ரா எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்துக்கு ஏராளமான பணம் செலவு ஆகும் என்ற பொருளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒருவருக்குத் திருமணம் ஆகி விட்டது. மற்ற இருவருக்கும் இனிதான் திருமணம் செய்ய வேண்டும். நீதிபதி மிஷ்ரா நிச்சயமாக தன்னுடைய மகள்களைக் கடன் சுமை என்ற பொருளில் அவ்வாறு குறிப்பிடவேயில்லை. பிரசுரிக்கப் பட்ட அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய்யானதும், ஆட்சேபகரமானதும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிரசுரிக்கப் பட்ட செய்தி.

இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கு மட்டும் துயரத்தையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்த வில்லை. அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கும் அவர் குடும்பத்துக்கும் எத்தனை வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதை அநக்ச் செய்தித்தாளின் பொறுப்பாளர்கள் உணர்ந்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. அவரின் நோக்கம் செய்தியைத் திரிப்பதன் மூலமாக பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே.

அப்படியே தன் மகள்களைப் பற்றி நீதிபதி மிஷ்ரா எழுதியது தவறு என்று வைத்துக் கொண்டாலும், அடுத்தவருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்தும் என்று உணராமல் இந்தத் தவறை திரித்து செய்தியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? இங்கே குழுமியிருக்கும் ஊடகத்துறையினரே நீங்களே சுயபரிசோதனை செய்து இதற்கான விடையைத் தேடிக் கொள்ளுங்கள்.

சமீப காலமாக, பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடும் போக்கு வளர்ந்து வருகிறது. 2009 தேர்தலில் இது பெரிய சர்ச்சையானது. இதை எப்படித் தடுப்பது என்பதை நாம் விவாதித்து முடிவு காண வேண்டும். 19.09.2011 நாளிட்ட தலைமை தகவல் ஆணையரின் உத்தரவுப் படி பிரனஞ்சோய் குஹா தாகுர்தா மற்றும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் அடங்கிய, இந்த விவகாரம் குறித்து ஏற்படுத்திய ஆய்வுக் கமிட்டியின் அறிக்கை ப்ரஸ் கவுன்சிலின் இணைய தளத்தில் ஏற்றப் பட்டுள்ளது. இந்த அறிக்கையை ப்ரஸ் கவுன்சில் தனது 26.04.2010 நாளிட்ட கூட்டத்தில் நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

அடுத்ததாக ஊடகங்கள் உண்மையான விவகாரங்களைச் செய்தியாக்காமல், அவசியமற்ற விவகாரங்களைச் செய்தியாக்குவது அடிக்கடி நடக்கிறது. நம் நாட்டில் கவனிக்கப் பட வேண்டிய விஷயங்கள், வறுமை, வேலையின்மை, போதுமான வீட்டு வசதி சுகாதார வசதியின்மை, 80 சதவிகித மக்கள் மோசமான பொருளாதார சூழ்நிலையில் வாழ்வது ஆகியவையே கவனிக்கப் பட வேண்டிய செய்திகள். ஆனால் இந்த விவகாரங்களை புறந்தள்ளி விட்டு, ஊடகங்கள் சினிமா நடிகரின் மனைவி கர்ப்பமானது, அவர் ஒரு குழந்தை பெற்றெடுப்பாரா, இரட்டை குழந்தை பெற்றெடுப்பாரா என்பது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. இதுவா இந்தத் தேசத்தை பீடித்திருக்கும் முக்கிய பிரச்சினைகள்?

லாக்மே இந்திய ஃபேஷன் விழா நடக்கையில் அரசு அங்கீகாரம் பெற்ற 512 செய்தியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாடல்கள் பருத்தி ஆடைகளை அணிந்து அணி வகுப்பதைக் கவனமாக செய்தியாக்கும் செய்தியாளர்கள் அந்த விழா நடக்கும் இடத்திலிருந்து விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்லக் கூடிய இடத்தில் இந்த பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை வசதியாக மறந்து விட்டார்கள். ஓரிருவரைத் தவிர விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி யாருமே கவலைப் படுவதில்லை.

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா? இந்தியாவின் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களின் மோசமான பொருளாதார சூழலைக் கண்டுகொள்ளாமல், கவர்ச்சியும் பரபரப்பும் இருக்கும் போலியான இடங்களில் தங்கள் கவனத்க்ச் செலுத்துவது முறையான செயலா? மக்களுக்கு ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று சொன்ன ராணி மேரி அன்டோனியெட் போல ஊடகங்கள் நடந்து கொள்ளவில்லை?

ஊடகங்கள் விவசாயிகளின் தற்கொலைகள், விலைவாசி உயர்வு, என முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இது 5 முதல் 10 சதவிகிதமே. மொத்த ஊடகத்தின் கவனமும், திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்க்கை, பாப் இசை, பேஷன் பரேடுகள், கிரிக்கெட் மற்றும் ஜோதிடத்திலேயே இருக்கிறது.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அருகேயும், மும்பாய், பெங்களுரிலும் குண்டு வெடிப்புகள் நடந்தன. குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே டிவி சேனல்கள் இந்தியன் முஜாஹிதீன் அல்லது ஜெய்ஷ் ஏ முகம்மது அல்லது ஹர்கத்துல் ஜிஹாத் ஏ இஸ்லாம் போன்ற அமைப்புகள் ஈமெயில் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டன என்று செய்திகள் வெளியிடுகின்றன. இது போன்ற இயக்கங்களின் பெயர்கள் எப்போதுமே இஸ்லாமியப் பெயர்களாக இருக்கும். ஒரு ஈமெயிலை யாரோ ஒரு விஷமி எளிதாக அனுப்பமுடியும். ஆனால் இதை டிவிக்களில் செய்தியாக காட்டுவதும், செய்தித் தாள்களில் அச்சிடுவதும் இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற போக்கு உள்ளது.

உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும், இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள். ஆனால் இது போலச் செய்திகள் வெளியிடுவதால், எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்கும். தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக எஸ்எம்எஸோ ஈமெயிலோ அனுப்பும் நபரின் நோக்கம் நிச்சயமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான். இது பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி. தெரிந்தோ தெரியாமலோ இந்திய ஊடகம் இந்தத் தந்திரத்தைக் கையாளுவது சரியா?

ஊடகத்துறையில் உள்ள சில குறைகளை சுட்டிக் காட்டினேன். ஊடகத்தில் மட்டுமல்லாமல், நீதித் துறை அரசு நிர்வாகம் போன்ற துறைகளிலும் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் அனைவரும் இணைந்து இந்தக் குறைகளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

ஊடகத்துறையில் உள்ள குறைகளைப் போக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் தீர்க்கும் ஜனநாயக வழி. மற்றொன்று அரசு விளம்பரங்களை நிறுத்துவது, கடுமையான அபராதம் விதிப்பது என்ற கடுமையான வழி.

என்னுடைய கருத்தில் ஜனநாயகபூர்வமான வழியை முதலில் கடைபிடிக்க வேண்டும். இதன் பொருட்டு, நான் ஊடகத் துறையினரை, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்துறையினரை அடிக்கடி சந்தித்து உரையாடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அந்த விவாதங்களின் போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமல், நாமே சுயபரிசோதனை செய்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறியலாம். இந்தக் கலந்துரையாடல்கள் இரண்டு மாதங்களுக்கோ, மூன்று மாதங்களுக்கோ ஒரு முறை நடக்கலாம். அப்போதுதான் மக்களுக்கு ஊடகம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

ப்ரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் தொலைக்காட்சி ஊடகம் வராது என்றாலும் கலந்து உரையாடுவதில் தவறேதும் இல்லை. அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் இரண்டுக்கும் சமமான பொறுப்பு உள்ளது.

ஒரு வேளை ஊடகங்கள் ஒத்துழைக்க மறுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக விவாதங்களின் மூலம் சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ளலாம். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு தொலைக்காட்சிகளுக்குக் கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளைக் கூட தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை ப்ரஸ் கவுன்சிலின் பணி தாவாக்களை தீர்த்து வைப்பது மட்டுமே. ஆனால் நான் ப்ரஸ் கவுன்சிலைச் சமரச மையமாக மாற்ற வேண்டும் என்றும், அதுவே ஜனநாயகபூர்வமான வழி என்றும் கருதுகிறேன். இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

இந்தியா மிக முக்கியமான மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. விவசாயச் சமூகமாக இருந்து வந்த இந்தியா தற்போது தொழில் சார்ந்த சமூகமாக மாறி வருகிறது. 16 முதல் 19ம் நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய வரலாற்றைப் படித்திருப்பீர்களேயானால் தொழில் புரட்சி நடந்த அந்தக் காலகட்டத்தில் கடும் கலவரமும், குழப்பங்களும், போர்களும் நடந்தது என்பதைக் காண முடியும். அந்த நெருப்பில் குளித்த பிறகே ஐரோப்பா தற்போது உள்ளது போல நவீன சமுதாயமாக மாறியது. தற்போது இந்தியா அந்த நெருப்பில் இறங்கியுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தியா ஒரு நவீன தொழில் சார்ந்த சமூகமாக மாறும் வரை மிகுந்த வேதனையான காலகட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஊடகங்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சமூகத்திற்கு உதவ வேண்டும். சாதி உணர்வு, மத உணர்வு போன்றவற்றுக்கு எதிராக எழுதி நவீன விஞ்ஞான உணர்வுகளை வளர்க்கலாம்.

முடிக்கும் முன்பாக அஜ்மீர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மருத்துவர் டாக்டர் கலீல் க்ரிஸ்டியை விடுவிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்கிறேன். கலீல் சிஸ்டி 80 வயதானவர். அவர் இன்னும் நீண்ட நாள் வாழப் போவதில்லை. அவர் மிகச் சிறந்த மருத்துவர். கராச்சி மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு, எடின்பர்க் பல்கலைகழகத்தில் பிஎச்டி முடித்தவர். அவர் ஒரு இதய நோயாளி. மேலும் பல்வேறு நோய்களும் அவருக்கு இருக்கிறது. அவரால் நடக்க முடியாது. மனிதத்தன்மையோடு அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். விடுதலை செய்யப் பட்டால் அவர் கராச்சியில் உள்ள தனது மனைவியோடும் மகளோடும் அவர் இறுதிக் காலத்தை கழிக்க முடியும். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கோபால் தாஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்தது. ஆனால் இந்திய அரசு பல மாதங்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர், பிரதமர், ராஜஸ்தான் மாநில ஆளுனர் ஆகியோருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நாம் இவரை விடுதலை செய்தால், இந்தியாவின் நன்மதிப்பு கூடும். ஆனால் இவர் இந்தியச் சிறையில் இறந்தால், நமக்கு தீராத அவப்பெயர் உண்டாகும்."
இவ்வாறு அவர் பேசினார்.