islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பகவத் கீதையை நம்புகிறவன் தீண்டாமையை எப்படி ஒழிப்பான்?



சமூகச் சீர்திருத்தம் என்பது நமது நாட்டில் மிகவும் சாதாரணமாய்க் கருதிக் கொண்டிருக்கும் விஷயமாகும். சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தைப் பாமர மக்கள் சரியானபடி அறிந்திருக்கவில்லை. படித்தவர்களும், அறிஞர் களுமே சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தையும், அதன் தத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களே உண்மையான சமூகச் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையாய் இருந்து அதன் பிரதான தத்துவத்தை மக்கள் உணராமல் இருக்கும்படி செய்து வருகிறார்கள்.

நமது நாட்டில் இன்று முதன்மையாய் நடைபெற வேண்டியது சமூகச் சீர்திருத்தமேயாகும். ஆனால் அதற்கு இன்று நாட்டில் செல்வாக்கில்லை. உண்மையான சமூக சீர்திருத்தக்காரர் ஒருவர் இருவர் இருந்தாலும், அவர்களுக்கும் நாட்டில் செல்வாக்கில்லாமல் மக்களின் எதிர்ப்புக்கும், வெறுப்புக்குமே ஆளாகிறார்கள்.

பெரும்பான்மையான மக்களுக்கும், மனித சமூகத்தில் சமூகக் கட்டுப்பாட்டின் பயனாய் வெகுகாலமாய் தொடர்ந்து துன்பமனுபவித்து வரும் பாமர மக்களுக்கும், பயனற்றதான அரசியல் சீர்திருத்தம் என்னும் விஷயத்திற்கே இன்று நாட்டில் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது. மக்கள் கவனமும் பெரிதும் அதிலேயே இழுக்கடிக்கப்பட்டிருக்கிறது.

ஜனங்கள் அரசியல் கிளர்ச்சி மாய்கையில் இருந்து என்று விடுபடுகிறார்களோ, அன்று தான் சமூகச் சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் அறிய முடியும். மற்றபடி அதுவரையில் போலி சமூகச் சீர்திருத்த ஏமாற்றந்தான் நடைபெறும்.

அதுவும் அரசியல் சீர்திருத்தக்காரர்கள் தங்களுக்கு அனுகூலம் செய்து கொள்ளுவதற்காக, மக்களை ஏமாற்ற வேண்டிச் செய்யும் ஏமாற்றுப் பிரசாரமேயாகும்.

உண்மையான சமூகச் சீர்திருத்தத்தை இன்று எந்த அரசியல்வாதியும், பொருளியல்வாதியும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். நம்நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்கு பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட மக்களால் அவர்களது நன்மைக்கேற்ற அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சிதான் நடந்து வருகின்றது.

அதன் பயனாய் அநேக ராஜ்யங்களின் அரசியலில் பலவித மாறுதல் ஏற்பட்டும் இருக்கின்றன. இன்றும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

என்றாலும் இவற்றால் எல்லாம் பெரும்பாலான மனித சமூகத்துக்கு எவ்வித நன்மையும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லுவதற்கில்லை.

இங்கிலாந்து தேசம் அரசியலில் எவ்வளவோ பெரிய யுத்தங்களையெல்லாம் சமாளித்து, ஜனநாயக முறைப்படி பார்லிமெண்டு அமைத்து, அந்தப் பார்லிமெண்டுக்கு மந்திரிகளையும், அரசரையும் கட்டுப்படுத்தி, உலகத்திலேயே முதல்தரமான அரசியல் முறை என்றும் சொல்லும்படியான அரசியலைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் பயனாய் தந்திரபுத்தி உள்ளவர்களும், பிரபுக்களும், முதலாளிகளும்தான் பயனடைந்து வருகிறார்களே ஒழிய, பாமர மக்களுக்கு ஒரு நன்மையும் உண்டாகவில்லை. அங்கு இன்று 20, 30- இலட்சம் மக்கள் செய்வதற்கு வேலை இல்லாமலும் ஜீவனத்துக்கு வேறு மார்க்கமில்லாமலும் திண்டாடத்தான் செய்கிறார்கள்.

அமெரிக்கா தேசம் உலகத்திலேயே பெரும் செல்வம் பொருந்தியதாய் இருந்தும், குடி அரசு ஆட்சியாய் இருந்தும், அங்கு கூட பிரபுக்களும், வியாபாரிகளும் அறிவுக் கூட்டத்தாரும் தான் மேன்மையாய் வாழ்கின்றார்களே ஒழிய, பாமர மக்கள் கோடிக்கணக்காய் வேலை இல்லாமல் ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமல், வீடு வாசலற்றுத் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள

மக்கள் யாவருக்கும் பிறவியில் சமத்துவமும், சம சுதந்திரமும் இருக்குபடியானாலும் அரசியல் சீர்திருத்தத்தில் உச்ச நிலையை அடைந்ததுமான ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளிலேயே இப்படி இருக்கின்றதென்றால், நம் நாடு அதாவது பிறவியிலேயே கீழ் மேல் நிலையும் பிறவி காரணமாக அடிமைத்தன்மையும் இருந்து வரும் நாட்டின் நிலையைப் பற்றி, நான் உங்களுக்கு விவரிக்க வேண்டுமா என்று கேட்கின்றேன்.

நம் நாட்டில் சுமார் 30, 40- வருஷ காலமாய் அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சி இருந்து வந்ததை மக்கள் அறிந்தே, அதனால் ஒரு கூட்டத்தார் மாத்திரம் பயனடைந்து வந்ததையும் உணர்ந்தே, சமூகத் துறையில் சீர்திருத்தங்கள் ஏற்பட வேண்டும் என்று இரண்டொருவர் உணர்ந்து நீதிக் (ஜஸ்டிஸ்) கட்சி என்பதாக ஒரு கட்சியை ஆரம்பித்தார்கள். அது எதிரிகளின் தொல்லையில் சிக்கி அரசியல் சருக்கலில் நடக்க வேண்டியதாகிவிட்டது. அதற்கும் திண்டாட்டம் வந்த காலத்தில் சமூக சீர்திருத்தத்தையே முக்கிய நோக்கமாய்க் கொண்டு சுமயரியாதை இயக்கம் என்பதாக ஒன்று ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. இந்த இயக்கமும் எதிரிகளால் படும் தொல்லை ஒரு பக்கமும், படித்த கூட்டத்தாரால் படுகின்ற தொல்லை ஒரு பக்கமும் இருந்து கொண்டு தொல்லைப் படுத்தப்படுகிறது. என்றாலும் சமூகச் சீர்திருத்தம் என்பதே அதன் முக்கிய கொள்கை என்பதைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகின்றது.

சுமார் 10-வருஷ காலமாக, அது தன்னால் ஆன மட்டும் உழைத்து வந்திருப்பதுடன், சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தை மக்கள் ஒரு அளவுக்காவது உணரும்படி செய்திருக்கிறது.

மனித சமூகமானது பாமர மக்களை ஜாதி, மதம், பழக்கம், வழக்கம், பழைய சாஸ்திரங்கள், கடவுள் கட்டளைகள் என்னும் பேரால் கட்டுப்படுத்தப் பட்டு, அவர்களது வாழ்க்கையையே மிருக வாழ்க்கையைவிட மிகக் கீழானதாகவும், அடிமை வாழ்க்கையாகவும் ஆக்கி வந்திருக்கிறது. நம்முடைய அரசியல் மாத்திரமல்லாமல், உலகில் எந்த அரசியலும் இப்படிப்பட்ட சமூகக் கொள்கைகளை அஸ்திவாரமாகக் கொண்டே கட்டப்பட்டிருக்கிறது. இந்தச் சமூகக் கொடுமைக்கு அஸ்திவாரமான மதம், ஜாதி, பழக்கம், வழக்கம், சாஸ்திரங்கள், கடவுள் கட்டளைகள் என்பவை தகர்க்கப்படாமல் எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்த மேற்பட்டாலும் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது.

இன்று பிரபுக்களுக்கும், படித்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் ஜாதி, மதம், பழக்க வழக்கம், சாஸ்திரம், கடவுள் கட்டளை ஆகியவற்றின் பேரால், யாதொரு கெடுதியும் இல்லை; கஷ்டமோ நஷ்டமோ எதுவுமே இல்லை; அவர்கள் எல்லாம் இவற்றின் பயனாய் லாபமும் மேன்மையுமே அடைந்து வருகிறார்கள். அதனாலேயே பெரியதொரு அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் தீவிரக் கொள்கைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் என்கின்றவர் களுடன் அதன் கர்த்தாக்களாய் இருக்கின்ற படித்த கூட்டத்தாரும், பணக்காரர்களும் சேர்ந்து புதிய அரசியலுக்கு திட்டம் வகுக்கும் போது வெகு ஜாக்கிரதையாய் புதிய அரசியலில் ஜாதி, மதம், பழக்க வழக்கம், சாஸ்திரங்கள் முதலியவைகளில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்றும், வேறொருவர் அந்தப்படி செய்யவும் விடுவதில்லை என்கின்றதுமான ஒரு காவல் தீர்மானத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் பயனாகவே இன்று இந்நாட்டில் இந்து முஸ்லீம் தகராறும், இந்து கிறிஸ்தவத் தகராறும், பார்ப்பன பார்ப்பனரல்லாதார் தகராறும், மேல்ஜாதி கீழ்ஜாதித் தகராறும் பலமடைய நேரிட்டு விட்டது. அது காட்டுத் தீ போல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டும் வருகிறது.

காங்கிரசுக்காரர்கள்பூனைக் கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்தால், உலகமே இருண்டிருக்கும் என்று கருதுவது போல், அதைத் தங்கள் பிரசாரத்திலும், தங்கள் பத்திரிகைகளிலும் மறைத்து வைத்து ஏமாற்றுகிறார்கள். இவர்கள் அதை மறைக்க மறைக்க அந்த விஷயம் இன்று உலகமே தெரிந்து சிரிப்பாய்ச் சிரிக்கிற நிலைக்கு வந்துவிட்டது.

வட்டமேஜை மகாநாட்டில் என்ன நடந்தது? அரசியல் சீர்திருத்தச் சண்டையா? சமூகச் சீர்திருத்தச் சண்டையா? காங்கிரசை முகமதியர்கள் ஒப்புக் கொண்டார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக் கொண்டார்களா? தீண்டப் படாதவர்கள் ஒப்புக் கொண்டார்களா? தென் இந்திய பார்ப்பனரல்லா தவர்கள் ஒப்புக் கொண்டார்களா? காந்தியார் உள்பட என்ன சொல்ல நேர்ந்தது?

முகமதியர்கள், இந்து ராஜ்யத்தைவிட பிரிட்டிஷார் ராஜ்ஜியம் மேல் என்றார்கள்.

இந்துக்கள், முகமதியர் ராஜ்ஜியத்தை விட பிரிட்டிஷார் ராஜ்ஜியமே மேல் என்றார்கள்.

பார்ப்பனரல்லாதார், (ஜஸ்டிஸ் கட்சியார்) பார்ப்பன ராஜ்ஜியத்தைவிட, பிரிட்டிஷ் ராஜ்ஜியமே மேல் என்றார்கள்.

பார்ப்பனர்கள், (காங்கிரஸ்காரர்கள்) பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ்) ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்றார்கள்.

காந்தியார், தீண்டப்படாதார் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பதாக சொல்லிவிட்டார். அதாவது சுயராஜ்யம் இல்லாவிட்டாலும் சரி; சீர்திருத்தம் இல்லாவிட்டாலும் சரி; தீண்டப்படாதவர்களுக்கு வகுப்பு உரிமை வழங்க முடியாது என்று சொன்னது மாத்திரமல்லாமல் உயிரைக்கூட விட்டு விடுவேன் என்ற சொன்னார்கள். வங்காளத்துக்காரர்களும் இப்படியே சொல்லுகிறார்கள். பஞ்சாப்காரர்களும் இப்படியே சொல்லுகிறார்கள், எல்லைப் புரத்துக்காரர்களும் இப்படியே சொல்லுகிறார்கள்.

இந்தப்படி சொல்லுவது, இன்று நேற்று என்று சொல்லிவிட முடியுமா? இந்து தேச சரித்திரத்தைக் கண்டால் ஆயிரக்கணக்கான வருஷங்களாக இப்படி வகுப்புக்கு வகுப்பு விரோதமும், கலகமும் நடந்து கொண்டு வந்திருப்பதைச் சுலபத்தில் அறியலாம்.

இதற்கு யார் இதுவரையில் என்ன பரிகாரம் செய்தார்கள்? தீண்டப் படாதவர்களுக்கு, உயிர் போனாலும் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன காந்தியார், அதைக் கெடுத்ததல்லாமல் அவர் களுக்கு ஆக என்ன செய்தார்? அவர்கள் பேரால் பணம் வசூல் செய்தார். அதைக் கொண்டு காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் வெற்றி பெறும்படி செய்தார்.

பிறகு என்ன செய்தார்? காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபையில் தீண்டாமை ஒழியும்படியான சட்டங்கள் கொண்டு வரக்கூடாது என்று உத்திரவு போட்டார். தீண்டாமை விஷயமாய் ஏற்கனவே இருந்த மசோதாவையும் காந்தியாரும் ஆச்சாரியாரும் கொலை செய்தார்கள்.

இவைகளையெல்லாம் நான் சொல்லவில்லை. ஆதார மூலமாய்ப் பத்திரிக்கைகளில் வந்ததையே சொல்லுகிறேன். இதைக் காந்தியாரும், ஆச்சாரியாரும் ஒப்புக் கொண்டுமிருக்கிறார்கள்.

அதாவது பொது ஜனங்கள் சம்மதமில்லாமல், சமூக சம்பந்தமான தீர்மானங்கள் கொண்டு வரக் கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

தீண்டாமை ஒழிக்கப்படாமல், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்ஜியம் வராது என்று சொன்ன காந்தியாரும், ஆச்சாரியாரும் இன்று என்ன செய்கிறார்கள்?

முஸ்லீம்களை ஏமாற்றி, சுவாதீனம் செய்து கொண்டு தீண்டப்படாதாரையும், பார்ப்பனரல்லாதாரையும் ஒழிக்கப் பார்த்துவிட்டு இப்போது ஒன்றும் முடியாமல் போய்விட்டதால் திரைமறைவிலிருந்து சூட்சிகள் செய்ய ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் என்ன காரியம் சாதிக்க முடியும்? தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள் என்றுதான் சொல்ல முடியும்.

இன்றையக் காங்கிரஸ் பிரசாரம் ஐஸ்டிஸ் கட்சியை வைவதல்லாமல், அதை ஒழிக்க முயற்சிப்பதல்லாமல் எப்படியாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழித்து, நாட்டை பார்ப்பன ஆதிக்கத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதல்லாமல் வேறு என்ன கொள்கையையும், திட்டத்தையும் கொண்டிருக்கிறது?

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் செல்லுமிடங்களிலெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை நன்றாய் வைகிறார். அதற்குத் தகுந்தபடி நல்ல அவமானமும் அடைகிறார். அப்படியிருந்தும் இன்று பார்ப்பனப் பத்திரிகைகள் அதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றன. இந்தப்படி இருந்தால் நாட்டில் என்ன காரியம் நடக்கும்?

சமூக சம்பந்தமாகவும், ஜாதி மத சம்பந்தமாகவும் உள்ள தகராறுகளையும், அவநம்பிக்கைகளையும் ஒழிக்க யார் என்ன பிரயத்தனம் செய்கிறார்கள்?

வெள்ளைக்கார அரசாங்கத்தை வைவதும், முஸ்லீம்கள் இயக்கத்தையும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும் அழிக்கச் சூட்சி செய்வதுமே காங்கிரஸ் வேலையானால், இந்தக் காங்கிரசினால் மக்களுக்கு என்ன பலன் ஏற்பட்டுவிடும்? முதலில் வர்ணங்களையும், ஜாதிகளையும் பிறவியில் உயர்வு தாழ்வுகளையும் ஒழிக்காமல் எப்படி மனிதனுக்கு மனிதன் ஒற்றுமையும் அன்பும் ஏற்பட முடியும்?

ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர் களாகவும், மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசி மக்கள், இழிமக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால், இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராஜ்யம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும், சாஸ்திரமும், கடவுளும் யாருக்கு வேண்டும்?

ஆகவே இந்தக்கொடுமை ஒழிக்கப்படுவது சுயராஜ்யமா? அல்லது வெள்ளைக்காரனை ஒழிப்பதே சுயராஜ்யமா? என்று கேட்கின்றேன்.

மேற்கண்ட கொடுமைகளை ஒழிக்கும் முயற்சிக்கு எங்காவது வெள்ளைக்காரன் குறுக்கே வருகிறானா? இவைகள் ஒழியக் கூடாதென்று எங்காவது, எப்போதாவது வெள்ளைக்காரன் கூப்பாடு போடுகின்றானா?

மக்களின் சுயமரியாதைக்கு விரோதமாகவும், சுதந்திரத்துக்கு எதிரியாகவும் இருப்பது இன்று நமது மதம், ஜாதி, சாஸ்திரம், கடவுள் ஆகியவைகளா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமா? எந்தத் தனிப்பட்ட ஆங்கிலேயனாவது இன்று இந்தக் காரியங்களுக்கு எதிரியாய் வருகிறானா?

வெள்ளைக்காரனை வைவதின் மூலம், மக்களை ஏமாற்றி அடிமையாகவும் மானமற்றவர்களாகவும் நிரந்தரமாய் வைத்திருக்கச் செய்யும் சூட்சியே இன்றையக் காங்கிரசின் யோக்கியதையாகும். இம்மாதிரியான கொடுமைகளுக்கு நான் பார்ப்பனர்களை மாத்திரமே குற்றம் சொல்ல வரவில்லை.

ஏனெனில் பார்ப்பனர்கள் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகக் குற்றம் சொல்லப்பட்டு வந்திருக்கிறார்கள். இதன் பயனாய் அவர்கள் சிறிதுகூட அசைக்கப்படவே இல்லை. அறிவாளிகள் எல்லோரும் பார்ப்பனர்களை வைதுதான் இருக்கிறார்கள். சமீப காலத்தில் விவேகானந்தர், நாயர், லஜபதிராய், தாஸ், ராய் முதலிய அனேகர், எவ்வளவோ கடினமாகப் பார்ப்பனர்கள் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். என்ன பலன் கண்டு விட்டோம்? பார்ப்பனர்களை வைகின்றோமே ஒழிய, அவர்களுடைய சூட்சிகளுக்கு நாம் நிபந்தனையில்லாத அடிமைகளாய் இருந்து வருகிறோம்.

பார்ப்பனனுடைய மதத்தை நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம். அவன் சாஸ்திரங்களுக்கு அடிமையாய் இருந்து வருகிறோம்; அவன் கடவுளுக்குப் பக்தி செலுத்தி வருகின்றோம். இவற்றையெல்லாம் செய்து கொண்டு பார்ப்பனனை வைவதால் என்ன பயன்?

இன்றுள்ள பார்ப்பனர்களை எல்லாம் நீங்கள் ஒரு சிறு பூண்டுகூட இல்லாமல் ஒழித்துவிட்ட போதிலும், அவன் மதமும், சாஸ்திரமும், கடவுளும் உள்ள வரையில் ஒன்றுக்கு ஆயிரமாய்ப் பார்ப்பனர்களும் அவர்களது ஆதிக்கமும் பெருகிக் கொண்டுதான் இருக்கும்.

தீண்டத்தகாத மனிதனை இந்துமதமல்லவா சிருஷ்டித்தது?

நாலு வருணம், சூத்திரன் என்பது கீதையிலேயே இருக்கிறதே.

நாலு வருணத்தையும் நான்தான் சிருஷ்டித்தேன்என்று பகவானே கீதையில் திருவாய் மலர்ந்தருளுகிறாரே.

ஆகவே இந்து மதத்தையும், பகவத் கீதையையும், கிருஷ்ண பகவானையும் உண்மை என நம்பிக் கொண்டு இருக்கும் ஒருவன், தீண்டாமையையும்; சூத்திரப் பட்டத்தையும் பாதத்தில் இருந்து உற்பத்தியான வருணத்தையும் எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்கிறேன்.

இன்று காந்தியார் முதல் கொண்டு, சத்தியமூர்த்தியார் ஈறாக உள்ள எந்த அரசியல்வாதியாவது இதை ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றேன்?

அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியிலும் பொப்பிலிராஜா முதல், ஏ. ராமசாமி முதலியார் ஈறாக உள்ள தலைவர்கள் இவற்றை ஒப்புக் கொள்ளுவார்களா என்று கேட்கின்றேன்.

இதற்காகவே தான் சுயமரியாதை இயக்கம் இருந்து தீர வேண்டியிருக்கிறது. இன்று இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான், ஜாதி மத பேதத்தால் ஏற்பட்டுள்ள கொடுமைகளுக்கு அஸ்திவாரமான மதங்களையும், சாஸ்திரங்களையும், கடவுள்களையும், அழிக்கவும் ஒழிக்கவும் தைரியமாய் வேலை செய்து வருகின்றது. இதனாலேயே, இது இன்று இந்தியாவில் எவருடைய ஆதரவையும் பெற முடியாமல் தன் காலிலேயே நின்று தள்ளாடிக் கொண்டிருக்க வேண்டியதாகின்றது.

சுயமரியாதைக்காரர்கள் ஏன் ஜாதி, மதம், சாஸ்திரம், கடவுள் ஆகியவற்றின் மீது மிருகப் பாய்ச்சல் பாய்கிறார்கள் என்பதற்குக் காரணம் இன்னது என்று இப்போதாவது உணருங்கள்.

காந்தியாருக்கு, கீதையே வழிகாட்டியாய் இருந்து வருகிறதாம். ஆச்சாரியார், கீதை பாராயணத்துக்கு ஆகவே, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாராம். சத்தியமூர்த்தியார், கீதையைக் காப்பாற்றுவதற்கே சுயராஜ்ஜியம் கேட்கின்றோம் என்கிறாராம். இப்படிப்பட்ட தலைவர்களின் கை ஆயுதமாய் இருக்கும் காங்கிரசினுடன் சுயமரியாதைக்காரர்கள் எப்படிக் கலக்க முடியும்?

இப்படிப்பட்ட காங்கிரசில் சேர்ந்து உழைப்பதன் மூலம், ஜாதி மதக் கொடுமைகளும், சாஸ்திரம், கடவுள் சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் அவற்றால் ஏற்படும் ஏழ்மைகளும், இழிவுகளும் எப்படி ஒழிக்கப்பட முடியும்?ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் மக்கள் எல்லோரும் பிறவியில் சமம் என்பதையும், எல்லோருக்கும் சம சந்தர்ப்பமும், சம விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் கொடுக்க வேண்டும் என்பதையாவது ஒப்புக் கொள்ளுகிறார்கள்.இப்படிப்பட்ட ஜாதி, மதம், சாஸ்திரம், பழக்க வழக்கம் ஆகியவைகளை அரசியல் மூலம் காப்பாற்றுகிறோம் என்று அவர்கள் உத்திரவாதமும் கொடுப்பதில்லை.ஆகவே ஜாதி, மதக் கொடுமையிலும், பழக்க வழக்க கொடுமையிலும், சாஸ்திரம் கடவுள்கள் என்கின்ற கொடுமையிலும் துன்பமும் இழிவும் அடைந்து வருகின்றவர்கள், அதிலிருந்து விடுதலை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே உணர்ந்து பாருங்கள்!

- (கோபிச் செட்டிப்பாளையம் சமூகச் சீர்திருத்தச் சங்கத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - குடி அரசு 23.06.1935)

No comments:

Post a Comment