islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

2010 ஆண்டு முதல் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் கைது


அண்மைக் காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஸில்வான், அல் இஸாவிய்யா பிரதேசங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறைக்கும் ஜெரூசலவாசிகளான பலஸ்தீனர்களுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (31.05.2011) மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் காவல்துறைமீது கற்களை எறிந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 760 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, ஏனையோர் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கைகள் பலஸ்தீன் இளந் தலைமுறையினரை அச்சுறுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு எந்தவித முகாந்திரமும் இன்றி அல் இஸாவிய்யா பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறையினர், அங்கு உள்ள பலஸ்தீன் குடியிருப்பை நோக்கி தொடர்ச்சியாக வீசிய கண்ணீர்ப் புகைக் குண்டுகளினால் மூச்சுத்திணறி ஒரு சிறு குழந்தை பரிதாபகரமாகச் செத்துப் போனதையடுத்து, இப்பிரதேசத்தில் வாழும் ஜெரூசலவாசிகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறைக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டவண்ணம் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போர்வையில் ஜெரூசலவாசிகளான பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறையினர் கட்டவிழ்த்துவிடும் எல்லைமீறிய ஒடுக்குமுறைகள், வன்முறைகள் என்பவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பொதுமக்கள், அவை குறித்து எத்தனையோ முறைப்பாடுகளை முன்வைத்தும் அவற்றில் எந்த ஒன்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் கண்டுகொள்ளப்படவில்லை என்றும், இதனால் விரக்தியடைந்த நிலையில் இருக்கும் மக்கள், ஆக்கிரமிப்பாளர்களின் அராஜகங்களை எதிர்த்துக் கொதித்தெழும் நிலை தோன்றியுள்ளதாகவும் மேற்படி மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
inneram

No comments:

Post a Comment