islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

'' தராவீஹ் ''---20 ரக்அத்கள் பற்றிய ஆய்வு


இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதை ஹனபி மத்ஹபைச் சேர்ந்த பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொண்டதால் நமது நாட்டிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் 20 ரக்அத்கள் என்பது வழக்கத்துக்கு வந்து விட்டது.

இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லோ, செயலோ, அங்கீகாரமோ ஆதாரமாக உள்ளதா என்பதை முதலில் ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரைத் தவிர 20 ரக்அத்களை ரமளானில் தொழுபவர்களாக இருந்தனர் என்ற கருத்தில் கீழ்க்காணும் சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன.

நூல்: தப்ரானியின் கபீர் 10/86

நூல்:பைஹகீ 2/496

நூல்: தப்ரானியின் அவ்ஸத் 2/309

நூல்: தப்ரானியின் அவ்ஸத் 12/176

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 2/286

நூல்: முஸ்னத் அப்து பின் ஹமீத் 2/271


மேற்கண்ட ஆறு அறிவிப்புகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் மிக்ஸம் என்பார்.

மிக்ஸம் கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் ஹகம் என்பார்.


ஹகம் கூறியதாக அறிவிக்கும் அடுத்த அறிவிப்பாளர் உஸ்மானின் மகன் இப்றாஹீம் ஆவார். இவர் அபூஷைபா என்றும் கூறப்படுவார்.

மேற்கண்ட அனைத்து நூல்களிலும் ஹகம் என்பார் கூறியதாக இவர் (அபூஷைபா) தான் அறிவிக்கிறார். ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

ஹாபிழ் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயா என்ற நூலில் 'உஸ்மானின் மகன் இப்றாஹீம் என்பார் பலவீனமானவர் என்று அறிஞர்கள் ஏக மனதாக முடிவு செய்துள்ளனர்; இப்னு அதி அவர்கள் தமது அல்காமில் என்ற நூலில் இவரைப் பலவீனமானவர் என்று அறிவித்துள்ளார்' என்று குறிப்பிடுகிறார். இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸைத் தொடர்ந்து, 'அபூஷைபா எனப்படும் இப்றாஹீம் பின் உஸ்மான் என்பவர் மட்டுமே இதைத் தனித்து அறிவிக்கிறார்; இவர் பலவீனமானவர்' என்று குறிப்பிடுகிறார்.

இவரைப் பற்றி அறிஞர்கள் செய்த விமர்சனத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.

இமாம் அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவூத் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இவர் நம்பகமானவர் அல்ல என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

இவரைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை என்று புகாரி கூறுகிறார்.

இவர் நிராகரிக்கப்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார்.

பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்படுவதால் இவரை விட்டு விட வேண்டும் என்று நஸயீ, தவ்லாபி கூறுகின்றனர்.

இவர் பலவீனமானவர். இவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இவருடைய ஹதீஸை விட்டு விட்டனர் என்று அபூஹாத்தம் கூறுகிறார்.

இவர் மதிக்கப்பட வேண்டியவர் அல்ல என்று ஜவ்ஸஜானி கூறுகிறார்.

இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யக் கூடாது என்று ஸாலிஹ் ஜஸ்ரா கூறுகிறார்.

இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸ்ரா கூறுகிறார்.

இவர் பலமானவர் அல்ல என்று அபூ அலீ நைஸாபூரி கூறுகிறார்.

ஷுஃபா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்று அல்அஹ்வஸ் கூறுகிறார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 125

இவரைப் பற்றி ஒரு அறிஞர் கூட நல்ல அபிப்பிராயம் கொள்ளவில்லை. பொய்யர் என்றும் பலவீனர் என்றும் சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாக மட்டுமே இச்செய்தி அறிவிக்கப்படுவதால் 20 ரக்அத் தொழ வேண்டும் என்ற கருத்துடையவர்கள் கூட இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

தராவீஹ் 20 ரக்அத்களா? என்ற நூலில் ஜமாஅத்துல் உலமாவின் மூத்த தலைவரான நிஜாமுத்தீன் மன்பயீ பின்வருமாறு எழுதுகிறார்.

நபியவர்கள் இருபது தொழுதுள்ளார்களா?

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுபவர்களாக இருந்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அப்துப்னு ஹுமைத் (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஸ்னதிலும், பஙவி (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஃஜமிலும், தப்ரானீ (ரஹ்) அவர்கள் கபீரிலும், பைஹகீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய சுனனிலும் அறிவித்துள்ளார்கள். அனைவரும் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களின் வழியாகவே இதனை அறிவித்துள்ளனர். ஆனால் இதனுடைய அறிவிப்பாளர்களில் இப்றாஹீம் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த ஹதீஸ் பலவீனமான அறிவிப்புத் தொடருள்ளதாக இருப்பதால், முஹத்திஸீன்களுடைய அளவுகோள்படியுள்ள ஆதாரப்பூர்வமான முறையில் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லையானாலும் உமர் (ரலி) அவர்களின் நடைமுறையைக் கொண்டு அது தரிபடுத்தப்பட்டு ஏனைய ஸஹாபாக்கள் அனைவரும் மறுப்பேதும் தெரிவிக்காமல் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

(நன்றி : நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய 'தராவீஹ் 20 ரக்அத்களா?' என்ற நூல், பக்கம் 69, 70)

''ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்பதை இதன் மூலம் சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் நபியவர்கள் எட்டு ரக்அத் தொழுகை நடத்தியதாக வலுவான அறிவிப்புகள் உள்ளன.''

ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். மறு நாள் இரவு நாங்கள் பள்ளி வாசலில் கூடினோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்து சுப்ஹு வரை காத்திருந்தோம். (சுப்ஹுக்கு வந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வந்து தொழ வைப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்' என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சி விட்டேன்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: இப்னு ஹிப்பான் 10/301, தப்ரானியின் ஸகீர் 2/127
முஸ்னத் அபீயஃலா 4/370

ஜாபிர் (ரலி) கூறியதாக இதை அறிவிக்கும் ஈஸா பின் ஜாரியா என்பவர் பற்றி சிலர் குறை கூறியுள்ளனர். சிலர் உயர்வாகக் கூறியுள்ளனர். தஹபீ அவர்கள் இது நடுத்தரமான தரத்தில் அமைந்தது என்கிறார். ஆய்வு செய்வதில் வல்லவரான தஹபீ கூறுவது தான் சரியானது என்று இப்னு ஹஜர் வழிமொழிகிறார்.

நம்மைப் பொறுத்த வரை இது போன்ற தரத்தில் உள்ளதை ஆதாரமாகக் கொள்வதில்லை. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழ வைத்தார்கள் என்ற ஹதீஸை விட இது எத்தனையோ மடங்கு தரத்தில் உயர்ந்தது என்பதற்காகவே இங்கே இதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

உபை பின் கஅபு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! ரமளான் மாதத்தின் நேற்றைய இரவில் எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டது' என்றார். 'என்ன பிரச்சனை?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கவர், 'நாங்கள் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களாக இருக்கிறோம்; எனவே உங்களைப் பின்பற்றி நாங்கள் தொழுகிறோம்' என்று என் வீட்டில் உள்ள பெண்கள் கேட்டனர். அவர்களுக்கு எட்டு ரக்அத்கள் தொழுவித்து, பின்னர் வித்ரும் தொழுவித்தேன்' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த மறுப்பும் கூறாமல் மறைமுகமாகச் சம்மதம் தெரிவித்தனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்னத் அபீயஃலா 3/336

இதையும் ஈஸா பின் ஜாரியாவே அறிவிக்கிறார். இதுவும் நடுத்தரமான தரத்தில் உள்ள ஹதீஸ் தான்.

ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்திலமைந்த ஹதீஸ் அளவுக்கு இது பலவீனமானதல்ல என்பதற்காக இதை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து இத்தலைப்பின் துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நமக்குப் போதுமானதாகும்.

ரமளானிலோ, ரமளான் அல்லாத மாதங்களிலோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுததாக ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியும் இல்லை எனும் போது அதை விட்டொழித்து, நபிவழியைப் பேண வேண்டாமா? என்பதை முஸ்ம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

20 ரக்அத்தும் நபித்தோழர்களும்

20 ரக்அத்களுக்கு நபிவழியில் ஒரு ஆதாரமும் இல்லை எனும் போது அதை விட்டொழிப்பதற்குப் பதிலாக எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழவில்லை என்பது உண்மையே! ஆனால் நபித்தோழர்கள் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதுள்ளனரே!' என்று வாதிடுகின்றனர்.

உமர் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் 20 ரக்அத்களை உருவாக்கினார்களா? என்பதைப் பின்னர் நாம் தெளிவுபடுத்துவோம்.

ஒரு வாதத்துக்காக சில நபித்தோழர்கள் 20 ரக்அத்கள் தொழுததாகவே வைத்துக் கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் செய்துள்ளார்கள் என்று தெரிந்து, அதற்கு மாற்றமாக நபித் தோழர்கள் சிலர் செய்ததாகத் தெரியும் போது இரண்டில் எது சிறந்தது?

உமர் (ரலி) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் தேவையா?

நபியா? நபித்தோழரா? என்று கேள்வி வரும் போது நபியைப் புறக்கணித்து விட்டு நபித் தோழரைத் தூக்கிப் பிடிப்பது இஸ்லாத்தை விட்டும் நம்மை அப்புறப்படுத்தாதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தான் வஹீ வரும். நபித்தோழருக்கு வஹீ வராது என்பதைக் கூட அறிய வேண்டாமா?

நன்மை செய்வதில் நபித் தோழர்கள் நபிகள் நாயகத்தையும் மிஞ்சியவர்களா?


நபியவர்கள் மூலம் மார்க்கத்தை அல்லாஹ் முழுமையாக்கியிருக்கும் போது அவர்கள் கற்றுத் தராததை நபித் தோழர்கள் கண்டுபிடித்தார்கள் என்றால் மார்க்கத்தை நபிகள் நாயகம் முழுமையாக்கவில்லை என்ற கருத்து வருமே! இது சரி என்கிறார்களா?

அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில விஷயங்களை மறைத்து விட்டார்கள்; அதை நபித் தோழர்கள் அம்பலமாக்கி விட்டார்கள் என்பது இவர்களின் எண்ணமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்து தன் தூதராக நியமித்தான். முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் எதனையும் கூட்டாமல் குறைக்காமல் அவர்கள் மூலம் இறைவன் கற்றுத் தந்தான் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நம்பக் கூடியவர்களுக்கு நபிவழியே போதுமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழி போதாது; அது சரியில்லை; அதற்கு முரணாக நபித் தோழர்கள் காட்டியது தான் சரியானது என்று நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.


பீ.ஜெ.அவர்கள் எழுதிய ''தராவீஹ் ஓர் ஆய்வு''என்ற
நூலிலிருந்து---அ.அப்துல் வஹாப்.சேலம்  .


No comments:

Post a Comment