islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

''தராவீஹ் என்ற சொல்லே இல்லை''



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு தொழுகைகளும், அவற்றுக்கான பெயர்களும் ஹதீஸ் நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 

2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்)

3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 

4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை)

ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

ஆனால் தாரவீஹ் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியதாகவோ, தராவீஹ் என்ற தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுததாகவோ ஹதீஸ் நூற்களில் குறிப்பிடப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை நாம் ஆய்வு செய்தால் ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் தொழுதுள்ளனர் என்பதை அறியலாம்.

மற்ற மாதங்களில் இரவுத் தொழுகை தொழுவதற்கு மக்களுக்கு அவர்கள் ஆர்வமூட்டியதை விட ரமளானில் அதிக ஆர்வமூட்டியுள்ளனர். தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகையை மற்ற நாட்களில் தொழாதவர்கள் ரமளானிலாவது தொழுது நன்மையை அடைந்து கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

ரமளானில் யார் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 37, 2008, 2009


'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) 
நூல்: புகாரீ 1147, 2013, 3569

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி அபூ ஸலமா கேள்வி கேட்கிறார். அவரது கேள்வியே ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பது தான். அவர் ரமளான் தொழுகை பற்றியே கேள்வி கேட்டிருந்தும் ஆயிஷா (ரலி) அவர்கள், ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை' என்று விடையளிக்கிறார்கள்.

எனவே ரமளானில் தொழுவதும் தஹஜ்ஜுத் தொழுகை தான்.

ரமளானுக்குத் தனித் தொழுகை இல்லை. மற்ற மாதங்களில் தொழும் அதே தஹஜ்ஜுத் தொழுகை தான் ரமளானிலும் உள்ளது என்று தெள்ளத் தெளிவாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை நன்கு அறிந்த அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களே அறிவித்து விட்டனர்.

ரமளானில் சிறப்புத் தொழுகை இல்லை என்று ஆயிஷா (ரலி) தெரிவித்த பின் தராவீஹ் தொழுகையை எங்கிருந்து கண்டுபிடித்தார்கள்?

தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம்

ரமளானிலும் மற்ற மாதங்களிலும் ஒரே தொழுகை தான் என்று நாம் மேற்கண்ட ஆதாரத்தையும், ரக்அத்களின் எண்ணிக்கை என்ற தலைப்பில் எடுத்துக் காட்டவுள்ள ஆதாரங்களையும் கண்ட பின் உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். தராவீஹ் வேறு, தஹஜ்ஜத் வேறு என்ற விசித்திரமான வாதத்தை முன் வைக்கின்றனர்.

தஹஜ்ஜுத் என்பது எல்லா நாட்களும் தொழ வேண்டிய தொழுகையின் பெயர். ரமளான் மாதத்தில் தஹஜ்ஜுத் தொழுகையுடன் தராவீஹ் என்ற மற்றொரு தொழுகை உண்டு; எனவே தஹஜ்ஜுத்துக்கான ஆதாரத்தை தராவீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் காட்ட வேண்டாம் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

எனவே இது பற்றியும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது.

தஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு என்பதற்கு ஆதாரம் இருந்தால் அதை முதலில் ஏற்பவர்களாக நாம் இருப்போம்.

தஹஜ்ஜுத் வேறு, தராவீஹ் வேறு என்று வேறுபடுத்திக் கூறக் கூடியவர்கள் தராவீஹ் தொழுகைக்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். உலகம் அழியும் வரை இத்தகைய ஆதாரத்தை அவர்களால் எடுத்துக் காட்டவே இயலாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுது விட்டு ரமளான் மாதத்தில் மேலும் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்று ஆதாரத்தைக் காட்டாத வரை இந்த வாதத்தை அறிவுடையோர் ஏற்க மாட்டார்கள்.

நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸயீ 1588


இதே கருத்து அபூதாவூத் 1167, இப்னுமாஜா 1317, அஹ்மத் 20450 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரவில் தொழ ஆரம்பித்து, ஸஹர் கடைசி வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தான் தொழுதுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

                    இரவுத் தொழுகையின் நேரம்                         

தவறான கருத்து சிலரிடம் உள்ளதால் தராவீஹ், தஹஜ்ஜுத் என்று இரண்டு தொழுகைகள் உள்ளதாக நினைக்கின்றனர்.

தூங்கி எழுந்து பாதி இரவுக்குப் பின்னர் தொழுவது தஹஜ்ஜுத் தொழுகை

தூங்குவதற்கு முன் தொழுவது தராவீஹ் தொழுகை

என்று எவ்வித ஆதாரமும் இன்றி நம்புவது தான் குழப்பத்திற்கு முக்கியக் காரணம்.

ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸயீ 1588


ரமளான் மாதத்தில் இஷா முதல் சுப்ஹ் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை தான் தொழுதுள்ளனர் என்று மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் ஒன்றே இவர்களின் நம்பிக்கை தவறு என்பதற்குப் போதுமான சான்று.

இரவுத் தொழுகையை இரவு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுதது முதல் பஜ்ரு வரை பதினோரு ரக்அத் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216


இரவுத் தொழுகையை இஷாவிலிருந்து சுபுஹ் வரை தொழலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

எனது சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்பதற்காக அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். இரவின் கடைசி மூன்றாம் பகுதி ஆனதும் எழுந்து அமர்ந்தார்கள். வானத்தைப் பார்த்து

''வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன'' (3:190)

என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள். பல் துலக்கினார்கள். பின்னர் பதினொரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (சுப்ஹ்) தொழுகைக்கு பாங்கு சொன்னார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் புறப்பட்டு மக்களுக்கு சுபுஹ் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 7452


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 376


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுது முடிப்பதற்கும் சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கும் சரியாக இருந்தது என்பதையும் இரவின் கடைசி நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183


--p.j--

No comments:

Post a Comment