islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

அருகில் பள்ளி இருந்தும் ஒன்பது கி.மீ.நடந்து செல்லும் மாணவர்கள்: ஜாதிகள் இருக்குதடி பாப்பா!


சத்தி அருகேயுள்ள காலனி குழந்தைகள் தீண்டாமை கொடுமையின் காரணமாக, அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து சென்று கல்வி பயின்று வரும் பரிதாபமான நிலையில் உள்ளனர்.



சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள். காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ. தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி இருந்தும், இப்பகுதி மாணவர்கள் கல்வியை கற்க 4.5 கி.மீ.தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. காரணம் இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் என்பதால், அருகில் இருக்கும் பள்ளியில் இவர்களைச் சேர்ப்பதிலை. ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.

குண்டி பொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி தூரமாக இருக்கும் நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை கல்வி பயில அனுப்பி வருகின்றனர்.

குழந்தைகள் பள்ளிக்கு போகவும்,வரவும் தினமும் ஒன்பது கி.மீ. நடக்கவேண்டி உள்ளது. இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனையாக இருக்கிறது.

குண்டி பொம்மனூரில், அந்தளவுக்கு தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.

இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்” என்றனர்.

தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும், குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32 மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ. தூரம் நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.

ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இதைப்போன்று இன்னும் எத்தனை காலனிகள் இந்தியத் திருநாட்டில் உள்ளனவோ தெரியவில்லை.

1 comment: