islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

80 நாடுகளுக்கு பரவி வரும் வால் ஸ்டீரிட் போராட்டம்!

                                     

தொழில் அதிபர்களின் பேராசையை கண்டித்து அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம், 80 நாடுகளுக்கு பரவி உள்ளது. நான்கு கண்டங்களுக்கும் போராட்டங்கள் பரவிவருகின்றன. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு

தொழிற்சாலை அதிபர்கள் பேராசைக்காரர்களாக உள்ளனர், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதார நெருக்கடி போன்ற பல காரணங்களை கூறி ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஒருமாதத்துக்கும் குறைவான இந்தக் கால அளவில், வால் ஸ்ட்ரீட் ஆக்ரமிப்பு இயக்கம் நன்கு வலுவடைந்து, அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. வாஷிங்டன் ஆக்ரமிப்பு இயக்கம், லாஸ் ஏஞ்சலீஸ் ஆக்ரமிப்பு இயக்கம் என்ற நகர்சார் பெயர்களில் கிளைகளாகப் பரவும் ‘ வால்ஸ்ட்ரீட்’ ஆக்ரமிப்பு' (Occupy Wall Street) இயக்கம் மிக அமைதியான முறையில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறது.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை நோக்கி போராட்டக்குழுவினர் ஆயிரக்கணக்கானோர் நேற்று பிரமாண்ட பேரணியாக சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மான்ஹட்டன் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஐரோப்பா, ஆசியாவில் பரவுகிறது

இந்த போராட்டம் இப்போது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில நாடுகள் உள்பட 80 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்த 950 முக்கிய நகரங்களில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் போராட்டம்

லண்டனில் செயின்ட்பால் கத்தீட்ரல் அருகில் நூற்றுக்கும் அதிகமானோர் டென்ட் அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ரோமில் இளைஞர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். போலீசார் தடுத்ததால் அங்கும் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடியடி நடத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கும்பலை கலைத்தனர்.

செப்டம்பர் 17 தொடக்கம்

இப்போராட்டத்திற்கான முதல் அழைப்பு, கனடாவில் இருந்து வெளிவரும், "ஆட்பஸ்டர்ஸ்' இதழில், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முதலில் வெளிவந்தது. அந்த இதழில், எகிப்திய போராட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, அமெரிக்காவிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, லட்சக்கணக்கானோர் வால் ஸ்டிரீட்டில் திரள வேண்டும் என்று, பிப்ரவரி 2ம் தேதி, தலையங்கம் அறைகூவல் விடுத்தது.

தொடர்ந்து, ஜூலை 13ம் தேதி, இந்தப் போராட்டத்திற்காக,"ஆக்குபை வால்ஸ்ட்ரீட்' என்ற "ட்விட்டர்' கணக்கை, "ஆட்பஸ்டர்ஸ்' துவங்கியது. இதையடுத்துத் தான், செப்டம்பர் 17ம் தேதி, ஆயிரம் பேர் திரண்டு வால் ஸ்டிரீட்டில், புகழ்பெற்ற பங்குச் சந்தையின் அடையாளமான காளைச் சிற்பத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்' முழக்கம், "நாங்கள் 99 சதவீதம்” என்பதாகும். மீதமுள்ள ஒரு சதவீதம் தான், அரசியல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பது இதன் உட்பொருள்.

கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்ததைப் போல, நியூயார்க்கின் ஜுகோட்டி பூங்காவில் திரண்டுள்ள மக்கள், தங்கள் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கும், பூங்காவின் தூய்மைக்கும், தாங்களே பல குழுக்களை அமைத்துச் செயல்படுகின்றனர்.

சிக்கலில் நாடுகள்

ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும், அகிம்சை வழியிலேயே திகழ வேண்டும் என, "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' இயக்கத்தின் இணையதளத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் கோரிக்கை உலகளவில் ஆதரவைப் பெறும் எனவும், இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் மையங்கொண்டிருந்தாலும், இந்த கிளர்ச்சிப் புயலானது ஐரோப்பாவின் ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று பரவி, அங்கும் போராட்டங்கள் நடந்துள்ளன. இதனால் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சிக்கலில் தவிக்கின்றன.

No comments:

Post a Comment